Saturday, November 26, 2005

Dalmiya-வின் ஆடுகள அரசியல்

டால்மியாவும் அவரது அடிவருடிகளும் சேர்ந்து கொண்டு அரங்கேற்றிய அபத்த அரசியல் நாடகத்தின் விளைவாக, கல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் நேற்று மண்ணைக் கவ்வ நேர்ந்தது. பொதுவாக, எந்தவொரு நாட்டின் கிரிக்கெட் வாரியமும், இன்னொரு நாட்டு அணி தம் நாட்டில் விளையாட வரும்போது, தமது அணிக்கு சாதகமாக ஆடுகளங்கள் அமைப்பது, நடைமுறையில் காணப்படும் ஒன்றாகும்.

இதற்கு மாறாக, பிரபிர் முகர்ஜி என்ற திமிர் பிடித்தவரின் மூளை குழம்பியதின் விளைவாக, அவர் "SPORTING WICKET" என்ற பெயரில், KINGSMEAD-க்கு இணையான ஆடுகளம் ஒன்றை உருவாக்கியதற்கு, BCCI-யில் தற்போது நிலவி வரும் உட்பூசலும் ஒரு முக்கியக் காரணமாகும். பணம் கொடுத்து, பல மணி நேரம் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி, பலவித சிரமங்களுக்கிடையில் அரங்கிற்கு வரும் ரசிகர்களை ஏமாற்றிய, வெறுப்பேற்றிய இந்தக் கோமாளி பிரபிர் முகர்ஜியின் மேல் என்ன நடவடிக்கை எடுக்க இயலும் என்று தெரியவில்லை ?!?!

இதே போல், கடந்த வருடம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு, ஷரத் பவாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் விதர்பா கிரிக்கெட் சங்கம் , டால்மியாவைப் பழி வாங்குவதாக நினைத்துக் கொண்டு, நாக்பூரில் பசுமையான ஆடுகளத்தை தயாரிக்க வைத்து, கிரிக்கெட் வீரர்களை (கிரிக்கெட்டையும்!) பலிகடாக்களாகவும், ரசிகர்களை முட்டாள்களாகவும் ஆக்கியது குறிப்பிட வேண்டியது. கிரிக்கெட் அரசியலில் "தாதா"வான கங்குலி கடைசி நிமிடத்தில் (உடல்நிலையை காரணம் காட்டி!) ஆட்டத்திலிருந்து விலகினார்! டிராவிட் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி தோல்வி அடைந்து ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரையும் (பல வருட காத்திருப்பிக்குப் பின்!) கைப்பற்றியது.

ஏற்கனவே, கங்குலி ஒரு நாள் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப் படாததால் கடுப்பில் இருந்த, நேற்று மைதானத்திலிருந்த கங்குலி ரசிகர்கள் (வெறியர்கள்!) இந்தியா 71-5 என்று சரிந்தபோது, "டிராவிட் ஒழிக", "சாப்பல் ஒரு கழுதை", "சச்சின் ஹை ஹை" என்று (டால்மியாவும், முன்னாள் கேப்டனும் எதிர்பார்த்தது போலவே!) கூக்குரலிட்டனர்! பொதுவாக, நேற்று கொல்கத்தாவில், தென்னாப்பிரிக்காவுக்கு பலத்த ஆதரவு காணப்பட்டதில், கொல்கத்தா கிரிக்கெட் வெறியர்களைப் பற்றி அறிந்தவர்களுக்கு பெரிய ஆச்சரியம் ஏதுமில்லை!

கங்குலி டெஸ்ட் அணியில் "ஆல்ரவுண்டர்" (கிரன் மோரேயின் கூற்றின்படி!) என்ற போர்வையில் சேர்க்கப்பட்டுள்ளார். 33 வயதில், திடீரென்று அவர் எப்படி ஆல்ரவுண்டர் ஆனார் என்பது புரியாத புதிர்! அப்படியானால், கபில்தேவையும், ·பிளின்டா·வையும், இம்ரான் கானையும் என்னவென்று அழைப்பது ??? என்ன ஒரு கேலிக்கூத்து இது ? இதனால், சமீபத்திய உள்ளூர் ஆட்டங்களில் நன்றாக ஆடிய ஜகீர்கான் டெஸ்ட் அணியில் இடம் பெற முடியாமல் போனது.

அணிக்குள் பின்புறக் கதவு வழியாக பிரவேசித்திருக்கும் கங்குலி, ஏதாவது அரசியல் பண்ணி, அணியின் ஒற்றுமையைக் குலைத்து, டிராவிட்டுக்கு தலைவலி தர மாட்டார் என்று நம்புவோம்!!! அதற்கு, வரும் BCCI தேர்தல், டால்மியாவுக்கும், அவரது அடிவருடிகளுக்கும் முடிவு கட்ட வேண்டும். BCCI-யிலும் மாநில அளவிலும் முக்கியப் பதவிகளில் இருக்கும் சில அரசியல் தரகர்கள் நடத்தும் கேவலமான அரசியல் விளையாட்டிலிருந்தும், அதனால் ஏற்படும் அவல நிகழ்வுகளிலிருந்தும் கிரிக்கெட்டுக்கு என்று தான் விடிவு காலம் வருமோ ?! உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள், நேற்று நடந்தேறிய கூத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அடுத்து வரும் இரண்டொரு ஆட்டங்களை புறக்கணித்தாலாவது, BCCI திருந்துவதற்கு வழி பிறக்கலாம் !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, November 21, 2005

கலாச்சாரக் கோவலர்கள் - உஷார்

குஷ்பு விவகாரத்தில் அவருக்கு ஆதரவாகக் குரலெழுப்பிய சுகாசினி "கலாச்சாரக் காவலர்களின்" பிரதிநிதிகளால் அலைக்ககழிக்கப்படுவதைத் தொடர்ந்து, குஷ்புவுக்கு ஆதரவாகப் பேசியதாக, தற்போது, சானியா மிர்ஸாவும் சிக்கலில் மாட்டியுள்ளார். விசாகப்பட்டினத்திலிருந்து ஹைதரபாத் வரை, அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறிக் கொண்டு, ABVP (Akhil Bharathiya Vishwarthi Parishad) மற்றும் பெயரில்லா முல்லாக்களின் ஆதரவாளர்களும் (இம்மாதிரி விவகாரங்களில் இவர்கள் ஒரே மாதிரி சிந்திப்பதில் ஆச்சரியம் இல்லை!) பல இடங்களில் பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சானியா படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து, அவரது உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போட்டுக் கலக்கியதில், சானியா கலங்கிப் போய் பின் வாங்கி விட்டார்!!!

குஷ்பு கூறிய கருத்துக்கள் குறித்து பல பதிவுகள் வந்து விட்டன. இந்தியா டுடே கருத்துக் கணிப்பு குறித்த பேட்டியில் அவர் சொன்னவை இரண்டு விஷயங்கள். ஒன்று, திருமணத்திற்கு முன் பாலியல் உறவு கொள்ள முற்படும் பெண்கள் பாதுகாப்பான முறையை கை கொள்ள வேண்டும். மற்றொன்று, எந்த படித்த ஆணும் தனக்கு வரப்போகும் மனைவி "கற்புள்ளவளாக" (அதாவது, திருமணத்திற்கு முன் மற்றொரு ஆடவனுடன் பாலியல் உறவு கொள்ளாதவளாக) இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். இவற்றை சில ஊடகங்களும், கலாச்சாரக் காவலர்களும் போட்டுக் (திரித்துக்) கலக்கியதில் தமிழகத்தில் குட்டை குழம்பி, சிலருக்கு மூளையும் குழம்பி விட்டது! இக்கருத்துக்களை எதிர்ப்பவர்கள், என்ன செய்திருக்க வேண்டும் ? திருமணத்திற்கு முன் ஒரு பெண் பாலியல் உறவு கொள்ளாமல் இருப்பதன் அவசியத்தையும் (உன்னதத்தையும்), ஓர் ஆண் 'கற்புள்ள' பெண்ணை மனையாளாகப் பெறுவதால் கிடைக்கும் பெரும் சிறப்பையும் மேடை போட்டு விளக்கியிருக்க வேண்டும் (அல்லது அவை குறித்து துண்டு பிரசுரங்களை மக்களிடையே விநியோகித்திருக்க வேண்டும்!) அல்லவா !?! மேற்கூறிய இரண்டையும், தமிழ் கலாச்சாரப்படி, ஆடவர்களுக்கு பொருத்திப் பார்க்கவே கூடாது !!! அவர்கள் சுதந்திரப் பறவைகள் !!!

"ஒருவனுக்கு ஒருத்தி" என்பது நம் தமிழ் கலாச்சாரமாகவே இருக்கட்டும்! நானும் இக்கருத்தை ஆதரிப்பவன் தான்! அதற்காக, சகிப்புத் தன்மை துளியும் இன்றி, செருப்பு, விளக்குமாறு, அழுகிய தக்காளி, முட்டை, கழுதையின் துணை கொண்டு, ஆர்ப்பாட்டமாக கண்டனம் தெரிவித்து, தனிமனித சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் இத்தகைய அராஜகப் போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. முன்பொரு முறை, தேர்தலில் தோற்ற கலைஞர் அவர்கள், தமிழனை "சோற்றாலடித்த ஏதோ" ஒன்றாக
வர்ணித்திருந்தார். அப்போது, எங்கே போயிருந்தனர், இப்போது பயங்கரமாக எதிர்ப்பு தெரிவிக்கும், மான உணர்ச்சி மிக்க, இவர்களெல்லாம் ?

"திருமணத்திற்கு முன் உறவு" என்பது ஒருவருக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம் .... அதனால், ஒரு பெண் சமூகத்தில் சந்திக்க நேரிடும் சங்கடங்களுக்காகவும், அப்பெண்ணின் வாழ்க்கை திசை மாறிச் செல்லக்கூடிய ஆபத்திற்காகவும்! அத்தகைய நிலை ஏற்படாமல் இருப்பது, நன்னடத்தை கொண்டவராக பிள்ளைகளை (ஆண், பெண் ஆகிய இருபாலரையும்!) வளர்ப்பதும், குடும்பச் சூழலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதும் மூலமாக பெருமளவு பெற்றோரின் கைகளிலும், ஓரளவு கல்வி அமைப்பிலும், ஆசிரியர் கைகளிலும் உள்ளது என்பது நிதர்சனம்.

இதைக் கூட புரிந்து கொள்ளாமல், யாரோ தூண்டி விட, இந்த "கலாச்சார மெய்க்காவலர்கள்" 'தையத்தக்கா' என்று குதிப்பதும், மாவட்டம் மாவட்டமாக வழக்கு போடுவதும் போன்ற கேலிக்கூத்து எதுவும் இல்லை. அதே நேரத்தில், சுகாசினி குஷ்புவுக்கு ஆதரவாக நிலை எடுத்ததோடு நில்லாமல், "ஒட்டு மொத்தத் தமிழர்களின் சார்பாக மன்னிப்பு கேட்பதாக" ஸ்டண்ட் அடித்திருக்க வேண்டாம். என் சார்பில் மன்னிப்பு கேட்க அவர் யார் என்பதற்காக இதைக் கூறவில்லை. குஷ்புவை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கையை விட அவர் கருத்தை வெளியிட அவருக்கு முழு உரிமை உண்டு என்று நம்புபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் !!! ஆனால், அவர்களில் பலர் 'நமக்கேன் வம்பு' என்று மௌனிகளாக இருக்கிறார்கள்.

இந்த வார ஆ.விகடனில் மூத்த பத்திரிகையாளர் ஞாநி சிந்திக்கத் தக்க வகையில் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அதே போல், சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் துணைத் தலைவர் சுதா ராமலிங்கம், 'மகளிர் உலகம்' என்ற அமைப்பைச் சேர்ந்த அம்மு ஜோசப், வசந்த் கண்ணபிரான், ரித்து மேனன் மற்றும் தேசிய மகளிர் கமிஷன் தலைவர் திருமதி கிரிஜா வியாஸ் ஆகியோர் இத்தகைய கண்டன ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் பெண்களுக்கு எதிராகவே, அவர்களை ஒடுக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன என்று கருத்து தெரிவிக்கிறார்கள். இன்று, நிதியமைச்சர் ப.சிதம்பரமும், RSS-உம் (?) குஷ்புவுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்கள்.

சுகாசினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோருபவர்களில் ஒருவரான பேராசிரியர் தமிழண்ணல் கூறியிருப்பதைப் பாருங்கள்! "தமிழர்கள் மான உணர்ச்சியும், நாண உணர்ச்சியும் மிக்கவர்கள். இவற்றை இழந்தவர்கள் தான் உளறுவார்கள்" என்கிறார்! கண்டனம் தெரிவிக்கின்ற போர்வையில் ஒரு பெண்ணை இவ்வாறு இழிந்து பேசுவது மட்டும் சரியா ??? பேராசிரியர் பழனியப்பன், தமிழ் மக்களுக்கு கலவியை விட உடல் பெரிது, உயிர் பெரிது, மானம் பெரிது, தமிழும் மானமும் வேறு வேறு அல்ல என்று ஏதேதோ வசனம் பேசி விட்டு, சுகாசினி இவை குறித்து அறியாததற்குக் காரணம் அவர் "வந்த வழி அப்படி" என்கிறார்! பெரியார்தாசன் ஒரு படி மேலே போய், "மனிதர்களின் பிரதிநிதியாக ஆவதற்கு மாடுகளுக்கு தகுதியில்லை" என்று தனி நபர் தாக்குதலில் இறங்குகிறார். கல்வியாளர்களே இப்படி இருந்தால், பாமரனிடம் எப்படி சகிப்புத் தன்மையை எதிர்பார்க்க இயலும் ?!?!

லேட்டஸ்டாக, திருமா விஜயகாந்துக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருக்கிறார்! அதில், நடிகர் சங்க உறுப்பினரான குஷ்பு, சுகாசினி ஆகியோர் பொதுமக்களுக்கு 'எதிராக' கருத்து கூறியதாகவும், பொதுமக்களுக்கு 'விரோதமாக' செயல்படுவதாகவும், அவர்களை சங்கத்தை விட்டு நீக்க வேண்டும் எனவும், இல்லாத பட்சத்தில் தமிழ்நாடு சங்க சட்டப்படி, கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் கூறப்பட்டிருக்கிறது! என்னத்த சொல்ல ?!!?

குஷ்புவின் கருத்துக்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தந்து, அவற்றை மிகத் தீவிரமாக எதிர்த்த கலாச்சாரக் காவலர்களின் செயல்களினால், அரசியல் களத்தில் குஷ்பு ஒரு Worthy Adversary என்ற பிம்பம் மக்களிடையே உருவாகி வருவதன் விளைவாக, பிற்காலத்தில், தமிழ்நாட்டுக்கு ஒரு வடநாட்டுப் பெண்மணி முதலமைச்சராக வரக் கூடிய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது :)

கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான, துளியும் சகிப்புத்தன்மை அற்ற, இப்போக்கை கண்டித்து, கருத்துச் சுதந்திரத்தின் பால் நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் (ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ...)இப்போது வாயைத் திறக்க விட்டால், கலாச்சாரக் கோவலர்களின் அனுமதியின்றி, பிறகு எப்போதும் வாயைத் திறக்க இயலாத ஓர் அவலமான சூழல் எதிர்காலத்தில் உருவாகி விடும் அபாயம் உள்ளது. தனிமனித கருத்துச் சுதந்திரத்தை கேள்விக் குறியாக்கும் இத்தகைய போக்கு குறித்து, தற்போது நீதிமன்றங்களில் இவ்விவகாரம் தொடர்பாக அனுமதிக்கப்பட்டிருக்கும் பல வழக்குகளின் விசாரணை மற்றும் தீர்ப்பு வாயிலாக, நீதியரசர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

நன்றி: தமிழ் முரசு, குமுதம் ரிப்போர்ட்டர்

நினைவூட்டல்: இப்பதிவைப் படிக்கும் வாசக நண்பர்கள் மறக்காமல், (பின்னூட்டுவதற்கு விருப்பமின்மையோ, நேரமின்மையோ காரணமாக இருந்தாலும்!) தயவு செய்து, தங்கள் ஆதரவையோ எதிர்ப்பையோ +/- வாக்கு வாயிலாக தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் !!!

Friday, November 11, 2005

தினமலரும் என் வலைப்பதிவும்!

கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கு முன் அனானி நண்பர் ஒருவர் என் பதிவின் பின்னூட்டத்தில் என் வலைப்பதிவு பற்றி தினமலரில் குறிப்பு வந்திருப்பதாகக் கூறியிருந்தார். ஆனால், உரலை அவர் குறிப்பிடாததால், அதை விட்டு விட்டேன். இப்போது சற்று பிரயத்தனப்பட்டு, தினமலர் வலைத்தளத்தில் தேடி அக்குறிப்பு அக்டோபர் 16ஆம் தேதி வந்துள்ளதை அறிந்து கொண்டேன். மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு !!! அவ்வுரல் கீழே:

http://dinamalar.com/2005oct16/flash.asp



தினமலருக்கு (தமிழ்மணத்திற்கும், அதன் வாயிலாக எனக்குக் கிட்டிய வாசக நண்பர்களுக்கும் கூடத் தான்!) என் நன்றி !

என்றென்றும் அன்புடன்
பாலா

*169*

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails